2/2
பெறுநர்,
மாண்புமிகு திரு. பிரகலாத் ஜோஷி அவர்கள்,
மத்திய அமைச்சர், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்,
இந்திய அரசு, புது தில்லி.
பொருள்: டிஜிட்டல் ஒளிபரப்பு தளங்கள் (OTT Platforms) தன்னிச்சையாகச் சந்தா விதிமுறைகளை மாற்றுவது - நுகர்வோர் பாதுகாப்பு குறித்த புகார்.
மதிப்பிற்குரிய அமைச்சரவர்களுக்கு,
வணக்கம். பொதுமக்களின் நலன் மற்றும் நுகர்வோர் உரிமைகள் தொடர்பான ஒரு முக்கியமான விவகாரத்தை தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
தற்போது நடைபெற்று வரும் FIFA உலகக்கோப்பை 2026 கால்பந்துப் போட்டிகளை ஒளிபரப்பும் ZEE5 போன்ற டிஜிட்டல் தளங்கள், போட்டி தொடங்குவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, அதாவது ஜூன் 11, 2026 அன்று, தங்களின் சந்தா விதிமுறைகளில் திடீர் மாற்றங்களைச் செய்துள்ளன.
இந்த மாற்றத்தின்படி, புதிய சந்தாதாரர்களுக்குத் தங்களின் சந்தா திட்டங்களுக்கான 'சாதனங்களின் வரம்பு' (Device Limit) வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக:
₹799 திட்டத்தில் இதுவரை அனுமதிக்கப்பட்டிருந்த 3 சாதனங்களுக்குப் பதிலாக, இனி ஒரு சாதனத்தில் மட்டுமே போட்டிகளைக் காண முடியும்.
₹1,699 திட்டத்தில் இதுவரை அனுமதிக்கப்பட்டிருந்த 4 சாதனங்களுக்குப் பதிலாக, இனி இரண்டு சாதனங்களில் மட்டுமே போட்டிகளைக் காண முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை போன்ற ஒரு பெரும் விளையாட்டு நிகழ்வு தொடங்குவதற்கு மிகக் குறுகிய காலத்திற்கு முன்பு, நுகர்வோர் ஏற்கனவே ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சந்தா செலுத்தியிருக்கக் கூடிய சூழலில், இத்தகைய தன்னிச்சையான கட்டுப்பாடுகளை விதிப்பது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் (Consumer Protection Act) அடிப்படை நெறிமுறைகளுக்கு முரணானது. இது வாடிக்கையாளர்களைத் திட்டமிட்டுச் சுரண்டும் 'தவறான வர்த்தக நடைமுறை'யாகவே (Unfair Trade Practice) கருதுகிறேன்.
எனவே, தாங்கள் இது குறித்து பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்:
1. போட்டி தொடங்குவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்ததன் பின்னணி குறித்து அந்நிறுவனத்திடம் விளக்கம் கோர வேண்டும்.
2. OTT தளங்கள் இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளின் போது, தன்னிச்சையாகச் சந்தா விதிமுறைகளை மாற்றி நுகர்வோரைச் சிரமத்திற்கு உள்ளாக்காமல் இருக்கத் தகுந்த வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்.
3. நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இதுபோன்ற வர்த்தக நடைமுறைகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
நாட்டு மக்களின் நலன் கருதி, இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, டிஜிட்டல் சந்தாதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன்.
இப்படிக்கு
சு. வெங்கடேசன்