பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தலைவர்
மருத்துவர் ச.இராமதாசு அறிக்கை...!
தமிழ்நாட்டில் மீன்வளப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு உரிமைகளை உறுதி செய்ய தமிழக அரசும், பல்கலைக்கழகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU) வழங்கப்படும் மீன்வள அறிவியல் பட்டப்படிப்பான BFSc (Bachelor of Fisheries Science) படிப்பை பயிலும் மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் வேலைவாய்ப்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும்.
மீன்வளப் பட்டதாரிகள் பயிலும் பாடத்திட்டத்தில் உயிரியல், விலங்கியல், சுற்றுச்சூழல் அறிவியல், நீரியல் வள மேலாண்மை, கடல்சார் உயிரியல் மற்றும் பல பாடத்திட்டங்களை கொண்டு பல்வேறு துறைகளில் பணிபுரியத் தேவையான கல்வித் தகுதியைப் பெற்றிருந்தாலும், அதற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரங்களைப் பெறுவதில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் இதுவரை போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது வேதனைக்குரியது.
இந்தியாவின் முதல் மாநில மீன்வளப் பல்கலைக்கழகமாகத் திகழும் இப்பல்கலைக்கழகம், தன்னுடைய பட்டதாரிகள் எந்தெந்த துறைகளில் பணியாற்றத் தகுதி பெற்றவர்கள் என்பதை தெளிவுபடுத்தி, அதற்கான அரசாணைகள் மற்றும் துறைசார் அங்கீகாரங்களை மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து பெற்றுத் தர வேண்டிய பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். மாணவர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பை கடுமையாக பாதிக்கிறது.
தமிழக அரசு கடந்த காலங்களில் விவசாயத் துறைக்கு இணையாக மீன்வளத் துறையையும் ஊக்குவிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை அறிவித்தது. இருப்பினும், அந்தக் கல்வியைப் பயிலும் மாணவர்களுக்கு போதுமான அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. தற்போது தமிழகத்தில் உள்நாட்டு மீன் வளர்ப்பு, இறால் வளர்ப்பு, கூண்டு மீன் வளர்ப்பு, ஒருங்கிணைந்த விவசாயம்-மீன்வளத் திட்டங்கள் போன்றவை வேகமாக வளர்ந்து வருகின்றன. இதனால் தகுதி வாய்ந்த மீன்வள நிபுணர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடலோர மாநிலங்களில் மீன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலங்களாக வளர்ந்து வரும் நிலையில், நீண்ட கடற்கரைப் பகுதி, ஏராளமான ஏரிகள், குளங்கள், அணைகள் மற்றும் ஆறுகளை கொண்ட தமிழ்நாடு மீன்வள உற்பத்தியில் தேசிய அளவில் முன்னோடி மாநிலமாக உருவாகும் திறன் கொண்டுள்ளது. ஆனால் அதற்கான மனிதவள மேம்பாடு, ஆராய்ச்சி விரிவாக்கம்,தொழில்நுட்ப பரவல் மற்றும் பட்டதாரிகளுக்கான பணியிட உருவாக்கம் ஆகியவை போதிய அளவில் நடைபெறவில்லை.
BFSc பட்டதாரிகள் வனத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், உணவுப் பாதுகாப்புத் துறை, உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த அனைத்து அரசு நிறுவனங்களிலும் பணிபுரிய தகுதியானவர்கள் என்பதை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகள் மீன்வளப் பட்டதாரிகளுக்கென தனித்த அரசு பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்.
மீன்வள ஆய்வாளர்கள், மீன்வள விரிவாக்க அலுவலர்கள், நீர்வள மேலாண்மை அலுவலர்கள் உள்ளிட்ட புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். மாவட்டந்தோறும் மீன் வளர்ப்பு ஆலோசனை மையங்கள் அமைத்து அதில் மீன்வளப் பட்டதாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.
மீன் உற்பத்தி, பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரித்தல் மற்றும் ஏற்றுமதி துறைகளில் அரசின் முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும். விவசாயத்திற்கு வழங்கப்படும் ஊக்குவிப்புகளைப் போலவே மீன் வளர்ப்புத் தொழிலுக்கும் சிறப்பு ஊக்குவிப்புகள் வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் மீன் உற்பத்தியை பல மடங்கு உயர்த்துவதற்கான ஒருங்கிணைந்த மாநில மீன்வள வளர்ச்சிக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.
மீன்வளத் துறையின் வளர்ச்சி என்பது வேலைவாய்ப்பு உருவாக்கம் மட்டுமல்ல; அது உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மேம்பாடு, கிராமப்புற பொருளாதார வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி வருவாய் உயர்வு ஆகியவற்றுடனும் நேரடியாக தொடர்புடையது. எனவே மீன்வளக் கல்வி பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகளையும், கல்வித் தகுதிகளுக்கான அங்கீகாரங்களையும் உடனடியாக வழங்க தமிழக அரசும், மத்திய அரசும், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.