உலகிலேயே நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்த தலைவர் நெல்சன் மண்டேலா.
தென்னாப்பிரிக்காவில் அகிம்சை வழியில் அடிமைச் சங்கிலியை உடைந்தெறிந்த மாபெரும் தலைவர்.
மண்டேலா 1918 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று குலு கிராமத்தில் பிறந்தார்.வளர்ந்து ஆளான பின்னர்
சட்டக்கல்வி பயின்றார்.
தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக்கு எதிராகப் போராடிய தலைவர்களில் மிகவும் முக்கியமானவர்.
மனித உரிமை ஆர்வலர், வழக்கறிஞர்,சர்வதேச சமாதானத்தை ஊக்குவிப்பவர் என்று பல முகங்களை கொண்டவர்.
இளம்வயதிலேயே ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்து
இளைஞர் லீக்கின் தலைவராக ஆனார். தென்னாப்பிரிக்க இளைஞர்களிடம் விடுதலை உணர்வை விதைத்தார்.
"நாம் அடக்கப்படுகிறோம். நமக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. நாம் பயணம் செய்வதற்கு நம் நாட்டினுள்ளேயே அனுமதி பெற வேண்டியுள்ளது. நிலவுடமையாளர்களாக நம் கறுப்பின மக்கள் இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இவை நீதியற்றவை"என போர்க்குரல் எழுப்பினார்.
1948ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் ஆட்சிப்பொறுப்பேற்ற புதிய அரசு, கறுப்பின மக்கள் மீதான அடக்குமுறையை மேலும் கட்டவிழ்த்துவிட்டது. புதிய சட்டங்களை கொண்டுவந்து மக்களை ஒடுக்கியது. இன மற்றும் நிற அடிப்படையில் பிரித்து, கறுப்பின மக்களைத் தனியாகக் குடியமர்த்தும் முயற்சியில் ஈடுபட்டது.
அரசின் சட்ட முறையிலான அடக்குமுறையை எதிர்த்து, 'ஆப்ரிக்கன் லீகல் பார்ட்னெர்ஷிப்' (African Legal Partnership) என்ற கறுப்பின மக்களுக்கான சட்ட அமைப்பை நிறுவினார்.
இதன் மூலம், அரசால் பாதிக்கப்பட்ட கறுப்பின மக்களுக்கு சட்ட ஆலோசனையையும், உதவியையும் வழங்கினார். நெல்சன் மண்டேலாவின் தொடர்ச்சியான அறப்போராட்டங்களால் அதிர்ந்துபோனது அரசாங்கம்.
1956ஆம் ஆண்டு அவரை தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைத்தது
.
1960ஆம் ஆண்டில் மாபெரும் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்தார். ஏழாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூடி நடத்தப்பட்ட அந்த அகிம்சா போராட்டத்தை, வெள்ளை அரசு வன்முறையின் மூலம் ஒடுக்கியது. அரச பயங்கரவாதத்தில் 69 பேர் மாண்டார்கள்.
இந்த சம்பவம் மண்டேலாவின் மனதில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விளைவு?
மண்டேலா ஆயுதங்களை கையில் தூக்கினார்.
மண்டேலாவையும் அவரது கூட்டாளிகளையும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது அரசு.
மண்டேலாவும் தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபட்டபடியே, அரசுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தார்.
அந்த நிலையில், 1963ல் நெல்சன் மண்டேலா உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
உலக நாடுகளின் அழுத்தத்தையும் மீறி 1963ஆம் ஆண்டு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து Robben தீவிற்கு கொண்டுசெல்லப்பட்டார்.
நெல்சன் மண்டேலாவுக்கு, கல்லுடைக்கும் வேலை வழங்கப்பட்டது.
1990ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் நாள் தனது 27 ஆண்டு சிறைவாசத்தை முடித்துக்கொண்டு விடுதலையானார் மண்டேலா.
1994 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்ற மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் கருப்பினத்தைச் சேர்ந்த முதல் அரசுத்தலைவரானார்.
மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு "நேரு அமைதி விருது" வழங்கியது.
இந்தியாவின் பாரத் ரத்னா விருது ,1993ல் உலக அமைதிக்கான நோபல் விருது,என
ஒட்டுமொத்தமாக 250 க்கும் மேற்பட்ட விருதுகளை உலகளவில் பெற்றுள்ளார் மண்டேலா.
"எனது வெற்றிகளின் மூலம் என்னை மதிப்பிடாதீர்கள், எத்தனை முறை நான் கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதன் மூலம் மதிப்பிடுங்கள்" என்று
நம்பிக்கை மிகு வார்த்தைகளை இந்த உலகிற்கு அளித்த நெல்சன் மண்டேலா, சிறையில் அடைக்கப்பட்டு 27 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை யான இந்த நாளில்,
இந்திய நடப்பு சூழலை நம்மால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
இந்தியாவில் 2022ஆம் ஆண்டு 1,71,000 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
வஞ்சிக்கப்படும் விவசாயிகள் வாழ வழியற்று தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து உள்ளன.
கோடிக்கணக்கானோர் மருத்துவத் தேர்வைகளை எதிர் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளுகின்றனர்.
ஒவ்வொரு தோல்விக்கும் தற்கொலையை நாடினால் மக்களுக்காக போராடவேண்டிய தலைவர்களை உலகம் இழந்துவிடும்.
தன்னலமற்ற தலைவர்கள் சந்திக்காத தோல்விகளா?
27 ஆண்டுகள் சிறைப்பட்டிருந்த நெல்சன் மண்டேலா மனம் தளர்ந்திருந்தால் தென்னாப்ரிக்காவின் இனவெறி ஆட்சி முடிவுக்கு வந்திருக்காது.
அண்ணல் காந்தி மனம் தளர்ந்திருந்தால் இந்தியா சுதந்திரம் அடைந்திருக்காது.
மகாத்மாவின் கொள்கைகளைப் ஏற்றுக் கொண்ட மண்டேலாவை உலகம் கொண்டாடுகிறது.
உலகத்தாரோடு சேர்ந்து நாமும் அவர் புகழ் பாடுவோம்.
#NelsonMandela #MandelaDay #MandelaLegacy #LongWalkToFreedom