”கல்லூரி வகுப்புக்கு 'Cut'...! கொள்கை வகுப்புக்கு 'Yes'...!”- எனது நினைவுகளில் LG...!
1989ஆம் ஆண்டு, நான் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்திருந்த சமயம். இன்றைய காலத்தைப் போலப் போக்குவரத்து வசதிகள் இல்லாத காலம் என்பதால் விடுதியிலேயே தங்கிப் படித்து வந்தேன்.
அப்போது எனது தந்தையார், செங்கை மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் சி.வி.எம்.பொன்மொழி அவர்கள், காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் 'இளைஞரணி பயிற்சி பாசறை' கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அண்ணன்கள் எல்.கணேசன், விடுதலை விரும்பி, திருச்சி செல்வேந்திரன் ஆகியோர் பங்கேற்ற அக்கூட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதும், என் ஆர்வம் அணை கடந்தது.
அண்ணன் எல்.ஜி அவர்களின் உரையைக் கேட்க வேண்டும் என்ற துடிப்பில், என் கல்லூரி வகுப்புக்கு 'Cut' அடித்துவிட்டு கொள்கை வகுப்புக்கு 'Yes ' சொல்ல முடிவு செய்தேன். வீட்டிற்கு தெரியாமல் கல்லூரிக்குத் தெரியாமல் விடுதியை விட்டுப் புறப்பட்டு காஞ்சிபுரம் அண்ணா அரங்கிற்கு வந்து சேர்ந்தேன். அன்று அவர் ஆற்றிய கொள்கைச் செறிந்த உரையை முதன்முதலாக நேரில் கேட்டேன். தமிழிலும், ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசும் அவரது ஆற்றல், கேட்போரை இன உணர்வு கொள்ளச் செய்யும். அந்த நிகழ்வு முடிந்து அவர் எங்கள் இல்லத்தில் மதிய உணவு அருந்தியபோது அவரை அருகிலிருந்து பார்த்ததும் இன்றும் என் கண்களுக்குள் நிழலாடுகின்றன.
நான் கல்லூரிக்குச் செல்லாமல் கூட்டத்திற்கு வந்ததை அறிந்த என் தந்தை, "ஏன் எழில் காலேஜுக்குப் போகாம மீட்டிங்குக்கு வந்தான்?" என்று என் தாயாரிடம் சத்தம் போட்ட அந்தச் சம்பவங்கள் இப்போதும் என் நெஞ்சில் நிழலாடுகின்றன.
பிற்காலத்தில் நான் கழக மாணவரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டபோது, சென்னை நமது தலைவர் இல்லத்தில் அவரைச் சந்தித்தேன். நான் இந்தப் பொறுப்பில் இருப்பதை அறிந்து அவர் என் மீது காட்டிய அன்பும், வாஞ்சையும் ஈடு இணையற்றவை.
1965 இந்தி எதிர்ப்பு போராட்ட காலத்தில் அண்ணாவின் தளபதியாக கலைஞர் இருந்தார். கலைஞருக்கு சீடராக இருந்து, மாணவர் போராட்டத்தை ஒருங்கிணைத்த பெருமை அண்ணன் எல்.ஜி-க்கு உண்டு.
1970-களில் கோவையில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு அது. அந்த மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த அண்ணன் எல்.ஜி. அவர்கள், "இந்தி திணிப்பை எதிர்த்து, நம் தாய்மொழியைக் காக்கும் போர்க்களத்தில் நமது உயிரையும் தியாகம் செய்யத் தயாராக வேண்டும்!" என்று வீர முழக்கமிட்டார்.
அவரது அறைகூவலை வரவேற்கும் விதமாக மேடையில் பேசிய அன்றைய இளைனர், இன்றைய நம் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் "அண்ணன் எல்.ஜி. அவர்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். எனது தந்தைக்கு நான்கு மகன்கள். நம் தாய்மொழியைக் காக்கும் போர்க்களத்தில் என் உயிர் தியாகமானால், அது என் தந்தைக்குப் பெருமைதான்!" என்று நெஞ்சுயர்த்திப் பேசினார். தலைவரின் அந்தத் தீரம் மிகுந்த வார்த்தைகள், இன்றும் என் நினைவுகளில் நீங்காமல் நிறைந்துள்ளன!
உடலால் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவர் ஊட்டிய திராவிட இயக்க உணர்வாலும், கொள்கை உறுதியாலும் அண்ணன் எல்.ஜி என்றும் நம் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார்.
சி.வி.எம்.பி. எழிலரசன்,
கழக கொள்கை பரப்புச் செயலாளர்,
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்.
#DMK #LGanesan #HindiAgitation1965 #DMKYouthWing #RIPLG #MemoriesOfLG #Parasakthi #பராசக்தி