தமிழகத்தின் அடையாளமான அண்ணா பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் ஒருவர் மாணவிக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள புகார், மிகுந்த அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியாக இத்தகைய பாலியல் குற்றங்கள் நிகழ்வது தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்புச் சூழல் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலின் மாடல் ஆட்சியில் உயர்கல்வி நிறுவனங்கள் கூடப் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற இடங்களாக மாறிவருவது வெட்கக்கேடானது.
ஏற்கனவே 2024 டிசம்பரில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகும், பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் திமுக அரசு தவறியது ஏன்? தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் திரு கோவி.செழியனின் நேரடிப் பார்வையில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தில், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதற்கு அவர் பதில் கூற வேண்டும்.
தொடர்ந்து பலமுறை, பேராசிரியர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்ததாக, மாணவி புகார் கூறியிருக்கிறார். இதனால் வேறு மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனரா என முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்தி, உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு, தமிழக காவல்துறைக்கு உள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள மாணவி மற்றும் அவரது வகுப்பு மாணவியர் அனைவரிடமும், ரகசியமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அனைத்து மாணவிகளுக்கும், பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். 2024ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் தாக்குதலுக்கு உள்ளானபோது காவல்துறை செய்த தவறுகளை, மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
முதலமைச்சர் அவர்களே! விளம்பரப் படங்களிலும், ஸ்டிக்கர் ஒட்டுவதிலும் காட்டும் கவனத்தைப் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் காட்டுங்கள். குற்றச்சாட்டுக்கு ஆளான அந்தப் பேராசிரியர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.