1950களில், 60களில் இருந்த காங்கிரஸ்காரர்கள் இந்தியாவின் விடுதலைக்காக போராடியவர்களாக மதிக்கப்பட்டவர்கள். அதனாலேயே பல மாநிலங்களில் காங்கிரஸின் ஆட்சி மக்களின் இயல்பான தேர்வாக இருந்தது.
காலப்போக்கில் இந்த "இயல்பான தேர்வு" காங்கிரஸுக்கு தந்த இறுமாப்பு, அவர்களிடம் "மக்களுக்கு நாம் சேவை செய்கிறோம்" என்ற எண்ணத்தை குறைத்து "மக்கள் தங்கள் தேவையை நிறைவேற்றிக்கொள்ள நம்மிடம் வருகிறார்கள்" என்ற எண்ணத்தை அதிகரித்தது. 1967ல் இங்கே காங்கிரஸ் தோற்றதற்கு அந்த மனப்பான்மையும் ஒரு காரணம்.
காங்கிரஸை வீழ்த்திய திமுக சாமானியர்களின் கட்சியாகவே ஆட்சியை தொடங்கியது. அதன்பின் 1977ல் ஆட்சிக்கு வந்த அதிமுகவும் அப்படியே தொடங்கியது. ஆனால், பிறகு மாறி மாறி ஆட்சிக்கு வந்து பழகியதால் இரண்டு கட்சிகளிலுமே முன்பு காங்கிரஸில் இருந்த அதே மனப்பான்மை வளர்ந்து நன்றாகப் பற்றிக்கொண்டது.
"இந்த மக்களுக்கு நம்மை விட்டால் வேறு வழியில்லை" என்ற எண்ணம் இந்த கட்சியினரிடம் ஆழமாக வேரூன்றிவிட்டது. அந்த எண்ணத்தின் விளைவு அவர்களது நடவடிக்கைகளில் பிரதிபலித்தது. திறந்த மனதோடு யோசித்தால், இந்த உண்மையை திமுகவோ அதிமுகவோ மறுக்கமுடியாது.
"தவெக உருப்படியான அரசியல் செய்யவில்லை, விஜய் பல இடங்களுக்கு பிரச்சாரத்துக்கே செல்லவில்லை, தவெக வேட்பாளர்கள் யார் என்றே தெரியவில்லை, கரூர் சம்பவத்துக்கு விஜய் சற்றும் பொறுப்பேற்கவில்லை" - இப்படி தவெகவுக்கு பல குறைகள் இருந்தும், தேர்தல் முடிவில் திமுகவும் அதிமுகவும் பின்னுக்குப் போனதற்கு மேலே சொன்ன அந்த மனப்பான்மையும் அணுகுமுறையும் ஒரு முக்கியமான காரணம்.
திருத்திக்கொள்ளாவிட்டால், அவர்களது இருப்பே கேள்விக்குறியாகிவிடும்.