வீட்டுக்கொரு மரம்
-------------
வளர்க்க வேண்டியதெல்லாம் வளர்த்தாகிவிட்டது
மரம் தான் பாக்கி
மரம் வளருங்க!
காட்டில் வளர்ந்ததையெல்லாம்
அவர்கள் சாப்பிட்டுவிட்டார்கள்
எனவே இனி வீட்டில் வளருங்க!
வீடே இல்லையே என்கிறீர்களா?
அப்படியென்றால் அவசியம் மரம் வளருங்க!
அதனடியிலேயே குடியிருக்கலாம்!
பிள்ளைகளை வளர்த்தால் சோறு கேட்பார்கள், வேலை கேட்பார்கள்
எனவே மரமே வளருங்க!
வீட்டுக்கொரு ஆண்மகன் வளர்ந்தால் போராட வருவான்
இது அகிம்சை நாடு
எனவே மரம் வளருங்க!
வியர்வை சிந்தி, இரத்தம் சிந்தி அவர்களை வளர்த்தீங்க
அவர்கள் காட்டில் மழை பெய்கிறது!
நீங்கள் காய்ந்து போனீர்கள்!
அவர்களுக்கு வாங்கும் கரங்கள்!
மரங்களுக்குக் கொடுக்கும் கரங்கள்!
அவர்கள் வெயிலைத் தருபவர்கள்;
மரங்கள் நிழலைக் கொடுப்பவை;
எனவே இனியாவது மரங்களை வளருங்க!
என்றைக்காவது ஒருநாள் உங்களுக்குச் சூடுசொரணை வந்தால்
தடிகள் செய்யலாம்!
அதனால்தான் சொல்கிறேன் மரங்களை வளருங்க!
- கவிக்கோ அப்துல் ரகுமான்